koonandiyurpanchayat

koonandiyurpanchayat
KOONANDIYUR PANCHAYAT

Monday, August 31, 2015

விவிலியம் - நீதிக்கு இலக்கணம்

விவிலிய பொன்மொழிகள் :


விவிலியம் கூறும் நீதிமொழிகள்

அதிகாரம் - 1


1.     தாவீதின் மகனும் இஸ்ரயேல் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.
2.     இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்: ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழிகளை உணர்ந்து கொள்வர்:
3.     நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்:
4.     அறிவுற்றோர் கூரறிவு பெறுவர்: இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.
5.     ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்: விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்:
6.     நீதிமொழிகளையும் உவமைகளையும் ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும் அவர்கள் உய்த்துணர்வர்.
7.     ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்: ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.
8.     பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி: உன் தாய் கற்பிப்பதைத் தள்ளிவிடாதே:
9.     அவை உன் தலைக்கு அணிமுடி: உன் கழுத்துக்கு மணிமாலை.
10.     பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்: நீ அவர்களுடன் போக இணங்காதே.
11.     அவர்கள் என்னைப் பார்த்து, எங்களோடு வா: பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்: யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்:
12.     பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்: படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழமையாக விழுங்குவோம்.
13.     எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்: கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.
14.     நீ எங்களோடு சேர்ந்துகொள்: எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும் என்றெல்லாம் சொல்வார்கள்.
15.     பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே: அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.
16.     அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன: இரத்தம் சிந்த விரைகின்றன.
17.     பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.
18.     அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்: அவர்கள் அளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும்.
19.     தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே: அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.
20.     ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது: பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது:
21.     பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது: நகர வாயிலிருந்து முழங்குகின்றது:
22.     பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்? இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம் இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்? முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம் அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்?
23.     என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்களானால், நான் என் உள்ளத்திலிருப்பதை உங்களுக்குச் சொல்வேன்: என் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24.     நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்: உங்களை அரவணைக்கக் கையை நீட் டினேன்: எவரும் கவனிக்கவில்லை.
25.     என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை: என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்.
26.     ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்: உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன்.
27.     பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது, இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது, துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நான் எள்ளி நகையாடுவேன்.
28.     அப்பொழுது, நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள்: நான் பதிலளிக்க மாட்டேன்: ஆவலோடு என்னை நாடுவீர்கள்: ஆனால் என்னைக் காணமாட்டீர்கள்.
29.     ஏனெனில், நீங்கள் அறிவை வெறுத்தீர்கள்: ஆண்டவரிடம் அச்சம் கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை
30.     நீங்கள் என் அறி¨வுரையை ஏற்கவில்லை: என் எச்சரிக்கை அனைத்தையும் அவமதித்தீர்கள்.
31.     நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்: சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள்.
32.     பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்: சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும்.
33.     எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்: தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்.

அதிகாரம் - 2
 


1.     பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,
2.     என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.
3.     ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு.
4.     செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.
5.     அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய்.
6.     ஏனெனில் ஞானத்தை அளிப்பவு¡ ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.
7.     நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்: மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்.
8.     நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்: தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார்.
9.     எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.
10.     ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்: அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும்.
11.     அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்: மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும்.
12.     நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி, அது உன்னைப் பாதுகாக்கும்.
13.     நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.
14.     அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.
15.     அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை.
16.     ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.
17.     அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்: தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள்.
18.     அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது: அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன.
19.     அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை: வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை
20.     எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக!
21.     நேர்மையாளரே உலகில் வாழ்வர்: மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர்.
22.     பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்: நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்.

அதிகாரம் - 3 
 

1.     பிள்ளாய்! என் அறிவுரையை மறவாதே: என் கட்டளைகளை உன் இதயத்தில் இருத்திக்கொள்:
2.     அவை உனக்கு நீண்ட ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் நிலையான நலன்களையும் அளிக்கும்.
3.     அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக! அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்.
4.     அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்: அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.
5.     முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு: உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.
6.     நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்: அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.
7.     உன்னை நீ ஒரு ஞானி என்ற எண்ணிக்கொள்ளாதே: ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு.
8.     அப்பொழுது உன் உடல், நலம் பெறும்: உன் எலும்புகள் உரம் பெறும்.
9.     உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று: உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.
10.     அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்: குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
11.     பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே: அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.
12.     தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.
13.     ஞானத்தை தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்: மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்:
14.     வெள்ளியை விட ஞானமே மிகுநலன் தருவது: பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது.
15.     ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது: உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.
16.     அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது. அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.
17.     அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்: அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை.
18.     தன்னை அடைந்தோர்க்கு அது வாழ்வெனும் கனிதரும் மரமாகும்: அதன¨ப் பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர்.
19.     அண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்: விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்.
20.     அவரது அறிவாற்றலால் நிலத்தின் அடியிலிருந்து நீர் பொங்கி எழுகின்றது: வானங்கள் மழையைப் பொழிகின்றன.
21.     பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்: இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்தி வை.
22.     இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
23.     நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்: உன் கால் ஒருபோதும் இடறாது.
24.     நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது: உன் படுக்கையில் நீ அயர்ந்து பங்குவாய்.
25.     பொல்லார் திகிலடைவதையும் அவர்களுக்கு அழிவு வருவதையும் காணும்போது நீ அஞ்சாதே.
26.     ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்: உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார்.
27.     உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.
28.     அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, “போய் வா, நாளைக்குத் தருகிறேன்“ என்று சொல்லாதே.
29.     அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே: அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?
30.     ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.
31.     வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே: அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.
32.     ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்: நேர்மையாளரோடு அவா உறவுகொள்கின்றார்.
33.     பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்: அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.
34.     செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்: தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்:
35.     ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்: அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.                 

                                                                                                                     ( தொடரும்...)

No comments:

Post a Comment